×

கோவையில் பரபரப்பு!: பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை வெட்டி கொலை செய்துவிட்டு நகைகள் கொள்ளை..!!

கோவை: கோவையில் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணின் தலை மற்றும் முகத்தில் வெட்டி கொலை செய்துவிட்டு 3 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நகைப் பறிப்பின் போது கொலை நடந்ததா? பெண்ணை திட்டமிட்டு கொலை செய்ய வந்தவர்கள் நகையையும் திருடி சென்றானா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பாலாஜி நகரில் குடியிருந்து வருபவர் மனோகரன். இவரது மனைவி 40 வயது ரேணுகா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த இவர்கள், கடந்த 12 வருடங்களுக்கு முன்பாக நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.

ரேணுகா அருகே உள்ள வணிக நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய கணவர் மனோகரன், மகா சுவெட்டர் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று பிற்பகல் 12 மணிக்கு மனோகரன் மற்றும் அவருடைய 2 பெண் குழந்தைகளும் கோவை காந்திபுரத்திற்கு சென்றுவிட்டனர். வீட்டில் தனியாக இருந்த ரேணுகாவை அடையாளம் தெரியாத நபர், பிற்பகல் 2 மணி முதல் 3 மணிக்குள்ளாக வீட்டிற்குள் புகுந்து அரிவாளால் தலை மற்றும் முகத்தில் வெட்டி கொலை செய்துவிட்டு கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க சங்கிலியையும் பறித்து சென்றுள்ளார். கணவர் மற்றும் மகள்கள் திரும்பிவந்து பார்த்தபோது, படுக்கையில் ரத்த வெள்ளத்தில் ரேணுகா இறந்து கிடந்துள்ளார்.

இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம், போலீசார் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த உறவினர்கள், ரேணுகாவின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளனர். தொடர்ந்து ரேணுகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள், கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர். அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி அதில் கொலையாளியின் உருவம் பதிவாகியுள்ளதா? என்றும் ஆய்வு செய்து வருகின்றனர். 3 சவரன் நகைக்காக கொலை நடந்ததா? அல்லது கொலையாளிக்கும் ரேணுகாவுக்கும் வேறு ஏதேனும் பிரச்சனை இருந்ததா? என்பது குறித்தும் போலீசாரின் விசாரணை தீவிரமடைந்துள்ளது. பட்டப்பகலில் வீடு புகுந்து பெண்ணை வெட்டி கொலை செய்துவிட்டு நகையை பறித்து சென்ற சம்பவம் கோவை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கோவையில் பரபரப்பு!: பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை வெட்டி கொலை செய்துவிட்டு நகைகள் கொள்ளை..!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,
× RELATED கர்நாடகாவில் இருந்து வாங்கி வந்து...